Published : 13 Dec 2013 10:40 AM
Last Updated : 13 Dec 2013 10:40 AM

நோக்கியா சொத்துகள் விடுவிப்பு: ரூ.2,250 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவு

நோக்கியா இந்தியா நிறுவனத்தின் முடக்கப்பட்ட சொத்துகளை அரசு விடுவிக்க வேண்டும் என்றும், இடைக்காலத் தொகையாக ரூ.2,250 கோடியை செலுத்துவதுடன் முழுத் தொகையையும் செலுத்துவதற்கான வாக்குறுதியையும் நோக்கியா நிறுவனம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

வரி ஏய்ப்பு செய்த குற்றத்துக்காக நோக்கியா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டிருந்த‌ நிலையில் மொத்தத் தொகையான சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாயை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் திணறியது நோக்கியா. இந்நிலையில், ஒருவேளை இந்நிறுவனம் மூடப்பட்டால் அங்கு பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது.

இதைத் தொடர்ந்து வியாழன் அன்று வெளியான தீர்ப்பினால் மகிழ்ச்சிப் பெருமூச்சு விடுகிறார்கள் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள்.

சென்னையில் நோக்கியா நிறுவனம்

இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் 2005-ம் ஆண்டு வந்திறங்கியது நோக்கியா. 2006ம் ஆண்டில் இருந்து தயாரிப்புப் பணிகளில் இறங்கியது. இந்நிறுவனம் வந்த புதிதில் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் உருவாகின. இதில்

70 சதவிகிதத்துக்கு மேலானவர்கள் பெண்கள். தற்போது அங்கு சுமார் 8,000க்கும் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள்.

வரி ஏய்ப்பு... பிரச்சினை என்ன?

சமீப காலமாக நோக்கியா நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்று புகார் எழுந்துள்ளது. இது குறித்து வருமான வரி அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் கூறியதாவது:

"நோக்கியா நிறுவனம் 2006 முதல் 2013வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது. பொருள்கள் இங்கே இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டாலும், அந்த பொருளுக்குத் தேவையான மென்பொருளை பின்லாந்தில் இருக்கும் தன் தாய் நிறுவனமான 'நோக்கியா கார்ப்பரேஷன்' நிறுவனத்திடமிருந்து வாங்குகிறது நோக்கியா இந்தியா. இப்படி வாங்கும் மென்பொருளுக்காக குறிப்பிட்ட தொகையை 'ராயல்ட்டி'யாக தன் தாய் நிறுவனத்துக்கு செலுத்துகிறது இந்திய நிறுவனம்.

"இந்திய அரசின் வரிச் சட்டத்தின் படி, இதுபோன்று வெளிநாட்டில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு இந்தியாவில் உள்ள நிறுவனம் 'ராயல்ட்டி' செலுத்தினால் அதற்கு டி.டி.ஏஸ். எனப்படும் வரிப் பிடித்தம் செய்து அதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த வரிப் பிடித்தம் செய்யப்படவேயில்லை.

"இந்நிலையில் 2010ம் ஆண்டு ஒரு சான்றிதழுக்காக நோக்கியா இந்தியா நிறுவனம் வருமான வரித்துறையிடம் விண்ணப்பித்தது. அப்போது அதனுடைய வருமான வரிக் கணக்குகளை சோதனையிட்ட போது அதுவரையிலும் வரிப் பிடித்தம் செய்யப்படாமல் இருந்தது தெரிய வந்தது. அதற்குப் பிறகு அந்நிறுவனத்தில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இவ்வளவு ஆண்டுகளாக குறிப்பிட்ட தொகையை வரிப் பிடித்தம் செய்யாமல் இருந்ததால் அதற்கான வட்டி, அபராதம் போன்றவை சேர்ந்து தற்போது ரூ. 21,153 கோடியாக உயர்ந்துள்ளது.

"இதற்கிடையில், கடந்த செப்டம்பரில் தங்கள் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது நோக்கியா கார்ப்பரேஷன். ஒப்பந்தத்தின்படி, சென்னையில் உள்ள இந்த நிறுவனம் டிசம்பர் 12ம் தேதி மைக்ரோசாஃப்ட் வசம் வரும். ஆனால் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்தது. மேலும், வரி ஏய்ப்பு செய்த மொத்த தொகையையும் செலுத்தும் வரையில் அந்நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியது அரசு. இதனால் மைக்ரோசாஃப்ட் நிறு வனம் நோக்கியா நிறுவனத்தைக் கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. ஒருவேளை ழுழுத் தொகையையும் நோக்கியா நிறுவனத்தால் செலுத்த முடியாமல் போனால் சென்னையில் இருக்கும் இந்நிறுவனம் மூடப்படும் அபாயமும் இருந்தது" என்றார்.

தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலமாக ரூ.2,250 கோடியை செலுத்த நோக்கியாவுக்கு உத்தரவிட்டுள்ளது. தவிர, முழுத் தொகையையும் செலுத்த வாக்குறுதி அளிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பணியாளர்களின் நிலை என்னவாகும்?

தற்போது, முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுவிட்டதால், ஒப்பந்தத்தின்படி, இனி நோக்கியாவின் தொழிலா ளர்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தொழிலாளர்களாகத் தொடர்வார்கள்.

"இந்நிலையில், ரூ. 2,250 கோடி ரூபாயை செலுத்த முன் வந்த‌து நோக்கியா. இதை ஏற்றுக் கொண்டு முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்காவிட்டால் நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொன்ன‌து நோக்கியா.

"அவ்வாறு நிறுவனம் மூடப்பட்டால் தொழிற்சாலையில் பணிபுரியும் 8,000 பேர் வேலை யிழப்பார்கள். தவிர, இந்நிறுவனம் மின்னணு நிறுவனங்கள், உதிரி பாகங்கள், ஒப்பந்ததாரர்கள் என‌ சுமார் 30,000 பேருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பை அளித்துள்ளது. அவர்களும் வேலையிழந்து பாதிக்கப்படுவார்கள்.

"இதை எதிர்த்து நாங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். மைக்ரோசாஃப்ட் நோக்கியா நிறுவனத்துக்கிடையேயான ஒப்பந்தத்தில் எங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். நோக்கியா நிறுவனம் கைமாறிய பிறகு அதன் தொழிலாளர்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று வழக்கை முன் வைத்தோம். தற்போது வந்துள்ள தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது" என்று தொழிலாளர் சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டம் என்ன?

வரி ஏய்ப்பு செய்த முழுத் தொகையையும் செலுத்த வருமான வரித்துறை நோக்கியாவை நிர்பந்திக்கிறது. இந்நிலையில், இந்திய நிதி அமைச்சகமும் பின்லாந்து நிதி அமைச்சகமும் இந்தப் பிரச்சினை தொடர்பாக விவாதித்து ஒரு முடிவுக்கு வர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடையற்ற மின்சாரம், குறைந்த விலையில் நிலங்கள், குறைந்த கூலிக்கு வேலையாட்கள் என மாநில மத்திய அரசுகள் எவ்வளவு தான் சலுகைகள் வழங்கினாலும், இது போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சட்டத்தை எந்த விதத்திலும் மதிப்பதில்லை என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x