Published : 13 May 2017 09:39 AM
Last Updated : 13 May 2017 09:39 AM
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களின்போது பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதை நிரூபித்து காட்ட முடியுமா என அரசியல் கட்சி களுக்கு தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது.
உத்தரபிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல் களின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறை கேடுகள் நடத்தப்பட்டதாகவும், இதன் காரணமாகவே பாஜக வெற்றி பெற்றதாகவும் பகுஜன்சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு, அதன் நடைமுறை, தில்லுமுல்லு செய்ய முடியுமா? உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கமளிக்கவும், சந்தேகங்கள் குறித்து விவாதிக்கவும் 2 நாள் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி டெல்லியில் நேற்று நடந்த முதல் நாள் கூட்டத்தில் காங்கிரஸ், பகுஜன்சமாஜ், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. அப்போது ஆம் ஆத்மி சார்பில் பங்கேற்ற டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ‘ஹேக்’ செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.
பின்னர் நிருபர்களை சந்தித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ சுவுரப் பரத்வாஜ், ‘‘இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் அச்சம் தொடர்பான எந்தவொரு புதிய தகவலையும் தேர்தல் ஆணையம் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வில்லை. ‘ஹேக்’ செய்வது தொடர் பான விரிவான விவாதம் தான் இந்த கூட்டத்தில் நடந்தது. தேர்தல் ஆணையம் தன்னிடம் வைத்திருக் கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒப்படைக்க முன்வரவில்லை’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் அதுல் அன்ஜன் கூறும்போது, ‘‘முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாத போது, இந்தியாவில் மட்டும் பயன்படுத்துவது ஏன் என தெரியவில்லை’’ என்றார்.
இதேபோல் திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுகவின் பன்னீர்செல்வம் அணி சார்பில் மைத்ரேயன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதற்கிடையே கூட்டத்தின் போது தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி வெளிப் படையாக சவால் விடுத்தார். அண்மையில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்ததை கட்சிகள் நிரூபித்துக் காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த சவாலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையர்களான ஏ.கே.ஜோதி மற்றும் ஓ.பி.ராவத் இருவரும் பாஜக அரசுடன் நெருங்கி பழகி வருவதாக அண்மையில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வரு மான அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் எந்த அரசியல் கட்சிகளிடமும் பாரபட்ச முறையில் தேர்தல் ஆணையம் நடந்து கொண்டதில்லை என்றும், அனைத்து அரசியல் கட்சிகளையும் சமமாகவே நடத்தி வருவதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்தார்.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரம் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என்றும் நேற்றைய கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT