Published : 21 Sep 2016 10:49 AM
Last Updated : 21 Sep 2016 10:49 AM

காவிரி வழக்கில் சொதப்பினாரா நாரிமன்?

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகளும் நாரிமனை மாற்றினால் மட்டுமே கர்நாடகாவுக்கு நியாயம் கிடைக் கும் என வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த நாரிமனை நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் முதலில் தமிழகத்துக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ததால் 12 ஆயிரம் கன அடி நீராக குறைக்கப்பட்டது. இந்நிலையில் காவிரி மேற்பார்வைக் குழு அதையும் 3 ஆயிரம் கன அடியாகக் குறைத்து உத்தரவிட்டது. இதையும் ஏற்காமல் கர்நாடக அரசு நாரிமனின் ஆலோசனையின் பேரில் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

கர்நாடகாவின் கொந்தளிப்பான சூழலில் மூத்த வ‌ழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் நேற்று ஆக்ரோஷமான மன நிலையில் சுமார் இரு மணி நேரம் நீண்ட வாதம் புரிந்தார். அவரது வாதத்தில், காவிரி நீரைத் திறக்க முடியாது என்றும், உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் காவிரி மேற்பார்வைக் குழு இந்த விவகாரத்தை அணுகு வதால், நீதிமன்றம் தலை யிடுவது முறையாக இருக்காது. காவிரி மேற்பார்வைக் குழு முதலில் கர்நாடகாவையும், தமிழகத்தையும் பார்வையிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதனிடையே 2007-ல் வெளியான காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் நகலை 30 நிமிடங்கள் வாசித்தார். இந்த தீர்ப்பின்படி மாதந்தோறும் தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறக்க முடியாது. வறட்சிக் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கவில்லை எனக் கூறி, மேலாண்மை வாரியம் குறித்த விவரங்களையும் வாசித்தார். இதன் அடிப்படையில்தான் நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்'' என்றார். காவிரி மேலாண்மை வாரியத்தை கர்நாடக அரசு கடுமை யாக எதிர்த்துவரும் நிலையில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியதால் ஃபாலி எஸ்.நாரிமன் அதிர்ச்சி அடைந்தார்.

நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று நேரடியாக உச்ச நீதிமன்ற அறைக்கு வந்திருந்தார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் போது, அடிக்கடி வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனுக்கு குறிப்புகளை எழுதி கொடுத்துக்கொண்டே இருந்தார். அனல் பறந்த வாதத்தின் போது கர்நாடக முதன்மைச் செயலர் அரவிந்த் ஜாதவிடம், தொடர்ந்து பல்வேறு கோப்புகளை கேட்டுக்கொண்டே இருந்தார். இதனால் சலிப்படைந்த அரவிந்த் ஜாதவ் எம்.பி.பாட்டீலிடம் அதிருப்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x