Last Updated : 02 Jun, 2016 08:49 AM

 

Published : 02 Jun 2016 08:49 AM
Last Updated : 02 Jun 2016 08:49 AM

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி? - இந்த மாத இறுதிக்குள் முடிவாகும்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

கடந்த 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சி தலைவரானார் சோனியா காந்தி (69). இவருடைய மகன் ராகுல் காந்தி (45) கட்சியின் துணைத் தலைவரானார். அதன்பிறகு நடந்த தேர்தல்களில் ராகுல் காந்தியின் முடிவுகளே பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு ராகுல் காந்தி தலைமை வகித்தார். ஆனால், வெறும் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது. அதன்பின் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கேரள மாநிலத்திலும் அசாம் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது.

அதனால், கட்சியை ‘ஆப ரேஷன்’ செய்ய வேண்டும், மாற்றி அமைக்க வேண்டும் என்றெல்லாம் திக்விஜய் சிங், சசிதரூர் போன்ற மூத்த தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். ஏற்கெனவே ராகுல் காந்தியை கட்சி தலைவராக்க வேண்டும் என்று கட்சியில் பலர் கூறி வருகின்றனர். அதற்கு மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல் தோல்விகளால், ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவி ஏற்பதற்கு சரியான நேரம் இதுதான் என்று கூறுகின்றனர். இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இந்த மாதத்துக்குள் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒருவேளை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்சியில் பெரும் மாற்றம் ஏற்படும். மூத்த தலைவர்கள் பலருக்கு கட்சி பதவிகளில் இருந்து ஓய்வளிக்கப்படும். இளைஞர்கள் பலருக்கு வாய்ப்புகள் வழங்கப் படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், ராகுல் காந்தி அவசரப்பட்டு முடிவெடுக்கிறார், அவருக்கு பொறுமை இல்லை. எனவே, கட்சியை இன்னும் சில ஆண்டுகளுக்கு சோனியா காந்தியே வழிநடத்தி செல்ல வேண்டும் என்று மூத்த தலைவர் கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ராகுல் காந்தி விரைவில் கட்சி தலைவராவார். இது சோனியா காந்தியின் முடிவு. அந்த முடிவை மதிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x