Last Updated : 07 Oct, 2014 10:28 AM

 

Published : 07 Oct 2014 10:28 AM
Last Updated : 07 Oct 2014 10:28 AM

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்: 3 பேர் காயம்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அக்டோபர் 1-ம் தேதி முதல் பாகிஸ்தான் சர்வதேச எல்லையிலும், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் 17 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

திங்கள்கிழமை இரவு எல்லையில் 40 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எல்லையோரத்தில் உள்ள 25 கிராமங்களும் பாதிக்கப்பட்டன. சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மட்டும் 3 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல் குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் வினோத் யாதவ் கூறியதாவது: "40 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள் இரவு 11 மணியளவில் இத்தாக்குதல் தொடங்கியது. அர்னியா, ஆர்.எஸ்.புரா, கனக்சக், பர்க்வால், சம்பா ஆகிய பகுதிகள் தீவிரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. பர்க்வால் பகுதியில் மட்டும் இரு தரப்புக்கும் இடையே இன்னும் சண்டை நீடிக்கிறது. இந்திய தரப்பில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ இல்லை" என்றார்.

ஜம்மு மாவட்ட நீதிபதி அஜீத்குமார் சாஹூ பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்: "அர்னியா, ஆர்.எஸ்.புரா, பர்க்வால், கஞ்சன்சூ ஆகிய எல்லையோர கிராமங்கள் பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடிய, விடிய தாக்குதல் தொடர்ந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காக 1000 பேர் வெவ்வேறு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்" என்றார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x