Published : 25 Apr 2017 09:40 AM
Last Updated : 25 Apr 2017 09:40 AM
காஷ்மீரில் என்கவுன்டர் நடக்கும் போது வீரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட, 300 வாட்ஸ் அப் குரூப் களில் ஆட்கள் சேர்த்தது அம்பலமாகி உள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போதோ, எங்காவது பதுங்கி கொண்டிருக்கும் போதோ, எல்லைத் தாண்டி காஷ் மீருக்குள் ஊடுருவும் போதோ பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் ஈடுபடுகின்றனர். அப்போது வீரர்கள் மீது காஷ்மீர் இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த போதும் இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதன் பின்னணியில் ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் இருப்பது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
என்கவுன்ட்டர் நேரங்களில் பாதுகாப்புப் படையினருக்கு இடை யூறாக அவர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட 300-க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள் ஆட்களைச் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் 250 பேர் உறுப்பினர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து காஷ்மீரில் இணையதள சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸ் அப் குழுக் களை உருவாக்கியவர்களைக் (அட்மினிஸ்ட்ரேட்டர்) கண்டறிந்து அவர்களை போலீஸ் நிலையத் துக்கு அழைத்து கவுன்சலிங் கொடுத்தோம். இந்த நடவடிக் கைக்கு நல்ல பலன் கிடைத்துள் ளது. இதுபோன்ற வாட்ஸ் அப் குழுக்களில் 90 சதவீதம் அளவுக்கு கடந்த 3 வாரங்களாக முடக்கப்பட்டுள்ளன.
இணையதள சேவை முடக்கப் பட்டதால், என்கவுன்ட்டரின் போது கல்வீச்சு குறைந்துள்ளது. பத்காம் மாவட்டம் தர்பாக் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை என்கவுன்ட்டர் நடந்த போது இளைஞர்கள் சிலர் மட்டுமே கல்வீச்சில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இணைய தளம் இல்லாததால் கல்வீச்சில் ஈடுபட கும்பலைச் சேர்ப்பது சாத்தியமில்லாமல் போனது.
இதற்கு முன்னர், கல்வீச்சு நடக்கும் இடத்துக்கு 10 கி.மீ. தூரத்தில் இருந்தெல்லாம் இளைஞர்கள் திரண்டு வந்து போராட்டக்காரர்களுடன் சேர்ந்து கொள்வார்கள்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
எனினும் இணையதள சேவையால் ஆன்லைன் வர்த்தகத்தை நம்பியிருக்கும் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT