Last Updated : 25 Feb, 2014 10:43 AM

 

Published : 25 Feb 2014 10:43 AM
Last Updated : 25 Feb 2014 10:43 AM

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியலை வெளியிட திமுக கோரிக்கை

மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஈடுபடவுள்ள அதிகாரிகளின் பட்டியலை அவர்களின் ஓய்வு பெறும் தேதிகளுடன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என திமுக கோரியுள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான டி.கே.எஸ்.இளங் கோவன் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு திங்கள்கிழமை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்து வதற்காக வரும் காலத்தில் மற்றும் குறிப்பாக அடுத்த ஆறு மாதங்களில் ஓய்வு பெறாதவர்கள் பட்டியலை அனுப்பும்படி ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த முடிவை வரவேற்பதுடன், பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பெயர்களை அவர்கள் ஓய்வுபெறும் தேதிகளுடன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இதன்மூலம், தேர்தலில் ஈடுபடும் அதிகாரிகளின் ஓய்வுபெறும் தேதிகள் வெளிப்படையாக பொது மக்களின் கவனத்திற்கு போய்ச் சேரும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 4-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையம் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுகவும் கலந்துகொண்டது. அதில் அக்கட்சியின் சார்பில் கலந்துகொண்ட இளங்கோவன், பணி நீட்டிப்பு செய்யப்பட்ட மற்றும் ஓய்வு பெறவிருக்கும் அதிகாரிகளை நேரடியாக தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது எனக் கோரியிருந்தார்.

அதேபோல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளையும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x