

தமது கட்சி நிதி தொடர்பான அரசின் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இதேபோல் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நிதி ஆதாரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் இன்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "எங்களது நிதியை விசாரிப்பதற்கான அரசின் உத்தரவை வரவேற்கிறோம். அதேபோல், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நிதி தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்" என்றார்.
முன்னதாக, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டதாக எழுந்த புகார் குறித்து அரசு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
கடந்த மாதம் டெல்லி உயர் நீதிமன்றம், ஆம் ஆத்மி கட்சியின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து அதன் நிதி ஆதாரம் குறித்து அறியும்படி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி குறித்து தீவிர விசாரணை நடப்பதாக அவர் தெரிவித்தார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து ரூ.19 கோடி தேர்தல் நிதி வசூலாகியுள்ளது என அக்கட்சியின் தேசிய செயலர் மற்றும் நிதி, நன்கொடைப் பிரிவு பொறுப்பாளருமான பங்கஜ்குப்தா கூறியிருந்தார்.
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்காக ரூ.20 கோடி வசூலிப்பதே எங்கள் இலக்கு. அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங், கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் ரூ.6 கோடி வழங்கியுள்ளனர்.
நாங்கள் இந்தியர்களிடம் இருந்து மட்டுமே நன்கொடை பெறுகிறோம். வேறு யாரிடம் இருந்தும் பெறுவதில்லை. சில வெளிநாட்டவர்கள் நன்கொடை கொடுக்க விரும்பிய போது மறுத்து விட்டோம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.