

காங்கிரஸார் நடத்தும் கூட்டங்களில் காலி நாற்காலிகளைக் காட்டி மனதை வேதனைப்படுத்த வேண்டாம் என மத்திய அமைச்சர்ரும் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார குழுவின் தலைவருமான கே.சிரஞ்சீவி ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் சீமாந்திரா பகுதிகளில் கடந்த 21-ம் தேதி பஸ் யாத்திரை தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஆங்காங்கே பொதுக்கூட்டங்க ளும் நடத்தப்பட்டு வருகிறது. விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் சிரஞ்சீவி பேசியதாவது:
மாநிலப் பிரிவினையில் காங்கி ரஸ் கட்சியை மட்டுமே குறை கூறுவது சரியல்ல. அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்ட பின்னர் தான் மாநிலத்தைப் பிரிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.
ஆனால் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநிலப் பிரிவினை குறித்து கட்சி மேலிடத்திற்கு சரியான தகவல்களை கொடுக்காததால் தான் தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி சிக்கலான காலகட்டத்தில் உள்ளது.
இந்த நேரத்தில் இதுநாள் வரை பதவியை அனுபவித்துவந்த புரந்தரேஸ்வரி உள்ளிட்டவர்கள் வேறு கட்சிக்கு சென்றுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில், மீண்டும் பிரஜா ராஜ்ஜியம் கட்சியை உருவாக்கினால் நல்ல எதிர் காலம் இருக்கும் என பலர் என்னிடம் ஆலோசனை கூறினர். நான் சுயநலவாதி அல்ல. எனக்கு ரசிகர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் பக்கபலமாக உள்ளனர்.
எனது தம்பி பவன் கல்யாண் ஒரு சமத்துவவாதி. ஆனால் அவர் ஒரு மதவாத கட்சியுடன் கூட்டு சேருவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைப்பது அவரது பதவி மோகத்தைக் காட்டுகிறது.
அவர் தெலங்கானாவில் ஒரு பேச்சும் சீமாந்திராவில் ஒரு பேச்சும் பேசி இரட்டை வேடம் போடுகிறார்.
நடைபெற உள்ள தேர்தல் குருஷேத்ர போரில், நாங்கள் (காங்கிரஸ்) பாண்டவர்களைப் போன்றவர்கள் என்றார் சிரஞ்சீவி.
இந்தக் கூட்டத்தின்போது, சீமாந்திரா காங்கிரஸ் தலைவர் ரகுவீரா ரெட்டி, சுப்புராமி ரெட்டி, கில்லி கிருபா ராணி, ஆனம் ராம் நாராயண் மற்றும் பலர் இருந்தனர்.