Published : 24 Aug 2016 08:00 AM
Last Updated : 24 Aug 2016 08:00 AM
மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே 1, ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. அவற்றின் முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியிடப் பட்டன.
இதை எதிர்த்து பிஹாரை சேர்ந்த சிவாங்கி சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது: ‘நீட்’ முதல் கட்டத் தேர்வு எளிமையாக இருந்தது. இதனால் அந்தத் தேர்வை எழுதியவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
ஆனால் 2-ம் கட்ட ‘நீட்’ தேர்வு கடினமாக இருந்தது. அந்தத் தேர்வை எழுதியவர்கள் மிகவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இதன் காரணமாக தரவரிசைப் பட்டியலில் அவர்கள் பின்தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த நீட் 1, நீட் 2 தேர்வுகளின் முடிவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.ஆர்.தேவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இம் மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT