Published : 16 Dec 2013 03:48 PM
Last Updated : 16 Dec 2013 03:48 PM

கங்குலி மீது சட்ட நடவடிக்கை: கபில் சிபல் நம்பிக்கை

பயிற்சி பெண் வழக்குரைஞரை பாலியல் ரீதியாக துண்புறுத்தியதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த கபில் சிபல்: "ஒரு பெண்ணின் பாதுகாப்பு சாதாரண நபர் ஒருவரால் கேள்விக்குறியாகும் போது அதை எப்படி சட்டம் அணுகுமோ அதே மாதிரி தான் முன்னாள் நீதிபதி கங்குலி விவகாரமும் அணுகப்பட வேண்டும்." என்றார்.

சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் வழக்குரைஞர் கடந்த மாதம் புகார் கூறியிருந்தார்.

அவரது புகார் குறித்து விசாரிப்பதற்காக 3 நபர் குழுவை சென்ற மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் அமைத்தது. விசாரணையின் போது,ஏ.கே. கங்குலி தான் பாலியல் தொல்லை கொடுத்தவர் என 3 நபர் குழுவிடம் பெண் பயிற்சி வழக்குரைஞர் தெரிவித்தார்.

இத்னையடுத்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் கொண்ட குழு, பாலியல் அத்துமீறல் நடந்தது உண்மையே என விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு கடிதம்:

ஏ.கே. கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி பெண் பயிற்சி வழக்குரஞர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் ஒரு சில பகுதிகளை, கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணின் அனுமதியுடனேயே வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்திரா ஜெய்சிங் தெரிவித்தார்.

முன்னாள் நீதிபதி கங்குலி, மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை துறக்க மறுக்கும் நிலையில், கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் ஜெய்சிங்கின் இந்த நடவடிக்கை அவருக்கு நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x