Last Updated : 02 Jan, 2015 03:06 PM

 

Published : 02 Jan 2015 03:06 PM
Last Updated : 02 Jan 2015 03:06 PM

அதிரடி ஆட்குறைப்பு: டி.சி.எஸ். மீது புகார் அளிக்கத் தயாராகும் ஊழியர்கள்

ஆட்குறைப்பு போர்வையில் ஊழியர்கள் பலரை கொத்துத் கொத்தாக பணி நீக்கம் செய்வதாக, துணை தொழிலாளர் ஆணையரிடம் பெங்களூரு டாடா கன்சல்டன்சி (டி.சி.எஸ்) நிறுவன ஊழியர்கள் வாய்மொழியாக புகார் அளித்துள்ளனர். விரைவில் முறைப்படி புகார் அளிக்கவும் தயாராகி வருகின்றனர்.

முறையற்ற ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ள டி.சி.எஸ். நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக முறையான புகார் மனுவை விரைவில் தாக்கல் செய்யவிருப்பதாகவும் டி.சி.எஸ். ஊழியர்கள் கூறினர்.

இது குறித்து தொழிலாளர் நல வாரிய துணை ஆணையர் ஸ்ரீபதா கூறுகையில், "டி.சி.எஸ். ஊழியர்கள் இன்னும் எழுத்துபூர்வமாக முறையான புகாரை அளிக்கவில்லை. அவ்வாறு அளிக்கும்போது பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி முதல் ஆட்குறைப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது டி.சி.எஸ். நிறுவனம். எந்த ஒரு முன்னறிவிப்புமே இல்லாமல் 7 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்ட மூத்த ஊழியர்களையே நிறுவனம் குறிவைத்து அனுப்புவதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் கூறும்போது, "ஒரு மாத கால நோட்டீஸ் மட்டும் கொடுத்து சுய விருப்புடன் ஓய்வு பெறுவதாக எழுதிக் கொடுக்குமாறு நிறுவனம் வற்புறுத்துகிறது" என்றார்.

அசிஸ்டென்ட் கன்சல்டன்டாக இருக்கும் மற்றொருவர், "முதலில் என்னை பிராஜக்டில் இருந்து நீக்கினார்கள். பின்னர் வேலையில் இருந்தே நீக்குவதாக கூறுகின்றனர்" என்றார்.

இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவரை 'தி இந்து' (ஆங்கிலம்) சார்பாக அணுகப்பட்டபோது, மின்னஞ்சலில் நிர்வாகம் சார்பில் பதில் அனுப்பபட்டுள்ளது.

அந்தப் பதிலில், "டிசிஎஸ் முழுக்க முழுக்க ஊழியர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவமனமாகும். நிறுவனத்தின் ஊழியர்கள் திறமைமிக்கவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காக சரியாக செயல்படாத ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்பது வழக்கமான ஒன்றே.

இது புதிய நடவடிக்கையோ அல்லது பெரிதுபடுத்த வேண்டிய நடவடிக்கையோ இல்லை. இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் உள்ள ஐ.டி. தொழில்நுட்ப ஜாம்பவான்களை அடையாளம் கண்டு வேலை வழங்கி வருகிறோம்.

இந்த நிதியாண்டில் மட்டும் புதிதாக 50,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். நிறுவனம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x