Published : 05 Aug 2016 08:27 AM
Last Updated : 05 Aug 2016 08:27 AM
கொல்லம், சித்தூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுக் கும் மைசூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது தேசிய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை சக்தி குறைந்த குண்டு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்க வில்லை. இதுகுறித்து மைசூரு மாநகர போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்ற னர். கேரளா, ஆந்திர மாநில போலீஸாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் இருந்து வந்துள்ள 5 பேர் கொண்ட தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவும் 4 பேர் அடங்கிய மத்திய உளவுத்துறை அதிகாரிகள் குழுவும் கடந்த இரு நாட்களாக மைசூருவில் முகாமிட்டுள்ளனர். குண்டுவெடித்த மைசூரு நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்ட அதிகாரிகள், இதை விசாரிக்கும் மைசூரு போலீஸாருடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு, ஜூன் 15-ம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த குண்டுவெடிப்பு, மைசூரில் நடந்துள்ள குண்டுவெடிப்புக்கு ஒற்றுமை இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த மூன்று குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் “பிரெஷர் குக்கர்'' முறையிலான குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய முறையை தொழில் ரீதியாக அனுபவம் வாய்ந்த நபர்களே கையாள முடியும்.
எனவே மைசூரு, கொல்லம், சித்தூர் ஆகிய மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை ஒரே அமைப்பு நிகழ்த்தி இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT