

டெல்லி ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை நவம்பர் 10-ம் தேதி இயக்க ரயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த அதிவேக ரயிலுக்கான 14 ரயில் பெட்டிகளில் 4 பெட்டிகளை கபூர்தலா ரயில் பெட்டிகள் தயாரிப்பு மையம் தயாரித்து முடித்துவிட்டது. இது குறித்து, கபூர்தலா ரயில் பெட்டி இயக்குநர் பிரமோத் குமார் கூறுகையில், "அதிவேக ரயிலுக்கான ஒரு பெட்டியை தயாரிக்க ரூ.2.5 கோடி செலவாகிறது. இதுவரை 4 பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. மற்ற பெட்டிகளை வெகு விரைவில் தயாரித்து முடித்துவிடுவோம்" என்றார்.
எனவே, ரயிலை நவம்பர் 10-ம் தேதி இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மும்பை அகமதாபாத் இடையே உயர்த்தப்பட்ட ரயில் பாதையில், மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் புல்லட் ரயில் இயக்க ரயில்வே திட்டமிட்டுவரும் வேளையில், டெல்லி ஆக்ரா இடையே தற்போது பயன்பாட்டில் உள்ள பாதையிலேயே அதிவேக ரயில் இயக்கும் திட்டத்தை சோதனை அடிப்படையில் ரயில்வே செயல்படுத்த திட்டமிட்டது.
டெல்லி ஆக்ரா இடையிலான சுமார் 200 கி.மீ. தூரத்தை கடப்பதற்கு, போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் தற்போது 126 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இந்த ரயில் சராசரியாக 110 கி.மீ. வேகத்தில் செல்கிறது. இந்நிலையில் ரயிலின் வேகம் 160 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டால், டெல்லி ஆக்ரா இடையிலான பயண நேரம் 90 நிமிடங்களாக குறையும்.