Published : 06 Oct 2014 04:30 PM
Last Updated : 06 Oct 2014 04:30 PM

வணிகக் கடல்சார் பணிகளுக்கான பயிற்சி

உலகில் பன்னாட்டுக் கடல்வழிப் பயன் பாடுகளுக்குத் தேவையான மனித வளத்தை அளிக்கும் நாடுகளில் இந்தியா ஆறாம் இடத்தில் இருந்து வருகிறது.

கடல் வழியைப் பயன் படுத்திச் செயல்படும் பன்னாட்டு வணிகக் கடற்படை பணிகளுக்கான தேவையும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு 1998-ம் ஆண்டில் தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியது.

இந்தப் பயிற்சி நிறுவனத்தின் வழியாகக் கடல்சார் பொதுநோக்க மதிப்பீட்டு முன்னேற்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இந்தப் பயிற்சியை மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய அரசின் கப்பல் வணிகத்திற்கான பொது இயக்குநரகம் அங்கீகரித்துள்ளது.

இட ஒதுக்கீடு

இந்தப் பயிற்சிக்குத் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். ஆங்கில வழியிலான இப்பயிற்சிக்கு ஆறு மாத காலம் முழுமையான இருப்பிடப் பயிற்சி (Residential Course) காலமாக இருக்கிறது.

ஆண்கள் மட்டுமே சேர்க்கப் படும் இப்பயிற்சிக்குப் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் 40 சதவிகித மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 40 சதவிகித மதிப்பெண்களைப் பெறாத நிலையில், அதற்கு உயர்வகுப்பான 12-ம் வகுப்பிலோ அல்லது பட்டப் படிப்பிலோ ஆங்கிலப் பாடத்தில் 40 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். பயிற்சியில் சேர்பவர்கள் 17 ½ வயதுக்குக் குறையாமலும், 25 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கு வயது வரம்பில் எந்தச் சலுகையும் அளிக்கப் படுவதில்லை.

தகுதிகள்

வயதினை உறுதிப்படுத்திடப் பிறப்புப் பதிவாளரால் வழங்கப் பட்ட பிறப்புச் சான்றிதழ் நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், பாஸ்போர்ட் பெற்றிருப் பதுடன் அதன் நகலும் இணைக்கப்பட வேண்டும். பயிற்சிக் கட்டணமாக

ரூ 1,20,000/- (ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய்) ஒரே தவணையில் செலுத்த வேண்டியிருக்கும். இத்துடன் வணிகக் கப்பல் சட்டம் - 2000 குறிப்பிடும் கடல் பணியாளர்களுக்கான மருத்துவத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பாக, இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது. நிறப் பார்வைக் குறைபாடுடையவர்களாக இருக்கக் கூடாது. கண்களில் எந்த விதமான குறைபாடு மில்லாமல் இருக்க வேண்டும்.

பயிற்சிகள்

இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர் களுக்குத் தூத்துக்குடியிலுள்ள கடல்சார் பயிற்சி நிறுவனத்தில் கருத்தியல் வகுப்புகளும், தூத்துக்குடி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனப் பணிமனையில் தொழிற்பயிற்சிகளும் அளிக்கப் படும்.

இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மும்பையிலுள்ள கப்பல் வணிகத்திற்கான பொது இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் கடற்பணிகளுக்கான தேர்வு வாரியம் நடத்தும் அகில இந்தியப் பொது நோக்க மதிப்பீட்டு பயிற்சிக் கான தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடு களைப் பயிற்சி நிறுவனமே செய்து தருகிறது.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Continuous Discharge Certificate - CDC எனும் தகுதிச் சான்றிதழைப் பெற முடியும். இந்தச் சான்றிதழைக் கொண்டு கடல் வழியைப் பயன்படுத்திச் செயல்படும் வணிகக் கடற்படைப் பணிகளை எளிதில் பெற முடியும்.

கட்டணமில்லை

இந்தப் பயிற்சி நிறுவனம், இந்தியத் தேசியக் கடற்பணி யாளர் தரவுதள எண் மற்றும் தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (Indian National Database of Seafarers (INDOs) Number and CDC) பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரும். இதற்காகத் தனியாகக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவை யில்லை.

இந்தப் பயிற்சி நிறைவுக்குப் பின் 36 மாதங்கள் கடல் சார் பணியில் அனுபவம் பெற்ற பின்பு வெளிநாடு செல்லும் கப்பலில் இரண்டாம் துணைப் பணியாளர் எனும் அலுவலர் நிலைக்கான தேர்வுகளை எழுத முடியும். வெளிநாட்டு கப்பல்களில் பணிபுரியும் வாய்ப்பையும் பெற முடியும். மேலும் விவரங்களுக்குத் தூத்துக்குடியிலுள்ள கடல் சார் பயிற்சி நிறுவன அலுவலகத்தினை 0461 - 2320075, 2320076, 2330076 எனும் தொலைபேசி எண்களில் அணுகலாம்.

- தேனி. மு. சுப்பிரமணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x