Published : 13 Sep 2016 11:16 AM
Last Updated : 13 Sep 2016 11:16 AM

இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள்

காவிரி விவகாரத்தில் கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்திருப்பது துரதிருஷ்டவசமானது. கன்னட மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் வகையில் செயல்படக் கூடாது. கன்னட அமைப்பினரும், விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கர்நாடக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்தப் போராட்டங்களினால் அரசுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. தமிழக மக்களுக்கும், அவர்களின் உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் தமிழ்நாட்டில் கன்னடர்கள் தாக்கப்படுவது வேதனை யளிக்கிறது. அங்குள்ள கன்னடர் களுக்கும், கன்னடர்களின் சொத்து களுக்கும் எவ்வித சேதமும் ஏற்படக்கூடாது,

தமிழகத்தில் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாகவும், அங்குள்ள கன்னடர்களுக்குப் பாதுகாப்பு வழங்க கோரியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். மேலும் கர்நாடக தலைமைச் செயலர் அங்குள்ள தலைமை செயலரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மூத்த காவல் துறை அதிகாரி களும் அங்குள்ள மூத்த அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி, கன்னடர்களுக்குப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கன்னடர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தமிழக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இரு மாநிலங்களிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடையக் கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் பேசக் கூடாது. கன்னடர்கள் சமூக வலைத்தளங்களில் தமிழகத்தை கண்டித்து பதிவிடக் கூடாது. காவிரி பிரச்சினையை இரு மாநில அரசுகளும் பேசித்தான் தீர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x