Published : 19 May 2017 11:53 AM
Last Updated : 19 May 2017 11:53 AM
புனேவிலுள்ள கேலக்ஸி கேர் மருத்துவமனையில் இந்தியாவின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
மிகச் சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சையை 12 மருந்துவர்கள் கொண்ட குழு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
சோலப்பூரைச் சேர்ந்த 26 வயதான பெண் பிறவியிலேயே கருப்பை இல்லாதத்தால் அவரது தாயாரின் கருப்பை, மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பொருத்தப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் அப்பெண் கருத்தரிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவரான சஞ்சீவ் ஜாதவ் கூறும்போது, "இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்கு நாங்கள் 8 மணி நேரம் திட்டமிட்டிருந்தோம், ஆனால் அறுவை சிகிச்சை 12 மணி நேரம் வரை நீடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமகாக முடிக்கப்பட்டது. தானம் வழங்கியவர் நலமாக இருக்கிறார். கருப்பை தானம் பெற்ற பெண் 24 மணி நேரம் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்றார்
தலைமை மருத்துவர் சைலேஷ் கூறும்போது, "கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு மாநில சுகாதார சேவை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும். அதன்பின் தானம் அளிப்பவரின் கருப்பை குறித்து நன்கு ஆய்வு செய்யப்படும். ரத்த ஓட்டங்கள் இயல்பாக இருக்கிறதா? கருப்பையின் செயல்பாடு நன்றாக இருக்கிறதா? போன்றவை ஆய்வு செய்யப்படும்" என்று கூறினார்.
இதுவரை சவுதி அரேபியா, அமெரிக்கா, துருக்கி, ஸ்விடன் ஆகிய நாடுகள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. அவற்றில் சில மட்டுமே வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
முதன்முதலாக 2014-ம் ஆண்டு ஸ்வீடனை சேர்ந்த பெண் ஒருவருக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு, இந்த சிகிச்சையின் மூலம் ஆரோக்கியமான குழந்தையும் அப்பெண் பிரசவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT