Published : 04 May 2017 10:22 AM
Last Updated : 04 May 2017 10:22 AM
பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட உயரமான ரயில்வே மேம்பாலம் காஷ்மீரின் சினாப் ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டு வருகிறது. 2019-ல் இப்பாலம் கட்டி முடிக்கப்படும்போது உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே மேம்பாலமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஜம்முவின் கத்ராவில் உள்ள பக்கல் பகுதியையும், நகரில் உள்ள கவுரி பகுதியையும் இணைக்கும் 1.3 கி.மீ நீளம் கொண்ட இப்பாலம் வளைவான வடிவத்திலும், பாரிஸின் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரத்திலும் ரூ.1,110 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து நாட்டின் பிற பகுதியை இணைக்கும் உதம்பூர் நகர் பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டால் சீனாவின் 275 மீட்டர் உயரம் கொண்ட ஷுய்பாய் ரயில்வே பாலத்தின் சாதனை முறியடிக்கப்படும்.
இதுகுறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி கூறும்போது, ‘‘காஷ்மீர் ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இப்பாலம் கட்டப்படுவது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டால் அது பொறியியல் துறையின் அதிசயமாக இருக்கும்’’ என்றார்.
தீவிரவாத தாக்குதல்கள், வெடிகுண்டு தாக்குதல்கள், வானிலை மாற்றங்கள் ஆகிய வற்றை தாங்கும் அளவுக்கு பிரத்யேக உருக்கு உலோகத்தில் இப்பாலம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக 24,000 டன் உருக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த பாலம் சினாப் ஆற்றுப் படுகையில் இருந்து இரு பள்ளத்தாக்கையும் இணைக்கும் வகையில் 359 மீட்டர் உயரத்தில் எழுப்பப்பட்டு வருகிறது. ஈபிள் கோபுரம் 324 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT