Published : 01 Mar 2016 12:04 PM
Last Updated : 01 Mar 2016 12:04 PM
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது அரசு உரிய நடவடிக்கைக் கோரி அதிமுக எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல் அவை கூடியது. அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் பல்வேறு கட்சியினரும் பல கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திச் சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவு மற்றும ஐ.டி. சோதனை நடைபெற்றதை சுட்டிக்காட்டிய அதிமுகவினர் அவர் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கார்த்தி சிதம்பரம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாவும் வெளிநாடுகளில் பல கோடி முதலீடு செய்திருப்பதாகவும் கூறி தொடர்ந்து கோஷமிட்டனர். தொடர் அமளி காரணமாக அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதே பிரச்சினையை எழுப்பி மாநிலங்களவையிலும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்ட அதிமுக உறுப்பினர்கள் ஆங்கில நாளேட்டில், கார்த்தி சிதம்பரம் பற்றி வெளியான செய்தியை சுட்டிக் காட்டி அமளியில் ஈடுபட்டனர். ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்து கார்த்தி சிதம்பரம் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி கோரினார். இதற்கு அவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அமளி காரணமாக, மாநிலங்களவை முதலில் பகல் 12 மணி வரை பின்னர் மதியம் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT