Published : 09 Oct 2014 12:52 PM
Last Updated : 09 Oct 2014 12:52 PM

ஹைதராபாத்: ராணுவ வீரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக கருதப்படும் சிறுவன் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் ராணுவ வீரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக கருதப்படும் 11 வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேதிப்பட்டினம் ராணுவம் முகாமில் புதன்கிழமை காலை பயங்கர தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட 11 வயது சிறுவன் சிகிச்சைக்காக டி.ஆர்.டி.ஓ, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், 90% தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேதிப்பட்டினம் ராணுவ முகாம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மரண வாக்குமூலம்:

ஹைதராபாத் சித்திக் நகரைச் சேர்ந்த சிறுவன் ஷேக் (11). இவர், அப்பகுதியில் உள்ள மதரஸா பள்ளியில் பயின்று வந்தார். ஷேக் அளித்துள்ள மரண வாக்குமூலத்தில், "என்னை ராணுவ வீரர்கள் இருவர் முகாமுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு என்னை சரமாரியாக தாக்கி, மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினர்" என கூறியுள்ளான்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு ராணுவ வீரர்கள் மீது ஹூமாயுன் நகர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். தற்போது சிறுவன் உயிரிழந்துவிட்டதால், வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷன்ர் மஹேந்திர ரெட்டி கூறும்போது, "விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தப்ப முடியாது" என்றார்.

ஆனால், ராணுவமோ சிறுவன் கொளுத்தப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர்கள் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும், இருப்பினும் போலீஸ் விசாரணைக்கு ராணுவம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x