

மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலால் அந்த நகரில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மும்பையில் இருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ள உரானில் கடற்படைத் தளம் அமைந்துள்ளது. அந்த கடற்படைத் தளம் அருகே கருப்பு உடை அணிந்த சில மர்ம நபர்கள் வியாழன் காலை ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததை பள்ளி மாணவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் பள்ளி முதல்வருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீஸாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் மும்பை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மர்ம நபர்களை நேரில் பார்த்த மாணவர்களிடம் மும்பை போலீஸார் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்துள்ளனர்.
இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் சர்மா கூறியதாவது: உரான் கடற்படை தளம் அருகே மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்த தகவலால் மும்பை, நவி மும்பை, தாணே, ராய்காட் கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் போலீஸார், கடலோர காவல் படையுடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 18-ம் தேதி காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ராணுவ, கடற்படை, விமானப்படைத் தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டில் கடல் மார்க்கமாக மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி 166 பேரை கொலை செய்தனர். எனவே மர்ம நபர்கள் நடமாட்டம் தகவல் மும்பையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.