Last Updated : 22 Apr, 2017 09:48 AM

 

Published : 22 Apr 2017 09:48 AM
Last Updated : 22 Apr 2017 09:48 AM

குடியரசுத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து சோனியாவுடன் சீதாராம் யெச்சூரி ஆலோசனை

குடியரசுத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆலோசனை நடத்தி உள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டெல்லியில் உள்ள அவரது அலுவலக இல்லத்தில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமாருடன் சோனியா காந்தி நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, சோனியாவை யெச்சூரி சந்தித்துள்ளார்.

அப்போது, கருத்தொற்றுமை உள்ள ஒருவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளராக அறிவிப்பது குறித்து சோனியாவுடன் யெச்சூரி ஆலோசனை நடத்தி உள்ளார். மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளும் ஒருவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தலாம் என்று சோனியாவிடம் யெச்சூரி கூறியுள்ளார். யெச்சூரி யின் யோசனைக்கு சோனியா காந்தி சாதகமான பதில் அளித்துள் ளார் என்று மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோருடனும் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து யெச்சூரி ஆலோசனை நடத்தி உள்ளார்.

‘‘காங்கிரஸின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜியையே 2-வது முறையாக குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிப் பார்களா?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மார்க்சிஸ்ட் வட்டாரங்கள் கூறும் போது, ‘‘எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொண்டால், அவரையே பொது வேட்பாளராக அறிவிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும், 2-வது முறையாக குடியரசுத் தலைவர் பதவி வகிக்க பிரணாப் விரும்புகிறாரா என்பது அவர் எடுக்கும் முடிவைப் பொறுத்தது’’ என்று தெரிவித்தன.

கடந்த 2012-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது. அப்போது ஆட்சியில் இருந்து காங்கிரஸ், பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவித்தது. அவரை எதிர்த்து பி.ஏ.சங்மாவை (தற்போது இவர் உயிருடன் இல்லை) பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி அறிவித்தது. அந்தத் தேர்தலில் பிரணாப் முகர்ஜி 7.13 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சங்மாவுக்கு 3.15 வாக்குகள் கிடைத்தன.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x