

‘‘திருமணம் செய்வதாகக் கூறி உறவு கொண்டபின் காதலன் ஏமாற்றினால், உறவுக்கு விருப்பம் தெரிவித்த படித்த பெண்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்’’ என்று பாலியல் பலாத்கார வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது காதலன் திருமணம் செய்வதாகக் கூறி தன்னை தூண்டி உறவு கொண்டுவிட்டு ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி 21 வயது காதலன் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மிருதுளா பக்த்கர் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளிப்பதை, உறவுக்கு தூண்டியதாக ஒவ்வொரு பலாத்கார வழக்கிலும் கருத முடியாது. படித்த இளம்பெண் திருமணத்துக்கு முன்பாக பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளித்தால், அவருடைய முடிவுக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
உறவுக்கு இளம்பெண் தூண்டப்பட்டார் என்பதை நம்புவதற்கு முகாந்திரமாக ஆதாரங்கள் இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற வழக்குகளில், திருமண ஆசை காட்டி ‘தூண்டினார்’ என்று கூறமுடியாது.
இந்த சமுதாயம் மாறி வருகி றது. அதேவேளையில் பல நடத்தை நெறிகளை இந்த சமுதாயம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக் கிறது. குறிப்பாக திருமணத்தின் போது கற்புடையவளாக இருக்க வேண்டியது பெண்ணின் பொறுப்பு என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்த சமுதாயம் பல நம்பிக்கைகளில் இருந்து விடுபட முயற்சித்தாலும், திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவை கண்டிக்கிறது.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு முன்ஜாமீனும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ‘படித்த, வயதுக்கு வந்த பெண்கள் திருமணத்துக்கு முன்பு உறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்ற முந்தைய தீர்ப்பையும் நீதிபதி மிருதுளா சுட்டிக்காட்டினார்.