இலங்கை பிரதமரிடம் மீனவர் பிரச்சினையை எழுப்பியுள்ளோம்: வெளியுறவு அமைச்சகம்

இலங்கை பிரதமரிடம் மீனவர் பிரச்சினையை எழுப்பியுள்ளோம்: வெளியுறவு அமைச்சகம்
Updated on
1 min read

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினையை தூதரக அதிகாரிகள் வாயிலாக இலங்கை பிரதமரிடம் எழுப்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர் ப்ரிட்ஜோ, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குண்டு பாய்ந்து பலியானார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக வட்டாரம், "இந்திய மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இலங்கைக்கான இந்திய துணை தூதர் இப்பிரச்சினையை இலங்கை பிரதமரிடம் எழுப்பியுள்ளார். நடந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என இலங்கை கடற்படையும் உறுதியளித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 2-ம் தேதி இருநாட்டு மீனவர்களிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்குப் பிறகு நடந்துள்ள முதல் துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.

இலங்கை மறுப்பு:

இதற்கிடையில், தமிழக மீனவரை நாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என இலங்கை தரப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் இலங்கை கடற்படை தளபதி சமிந்த வலகுலுகே, "எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்ய வேண்டும், அவர்கள் படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று மட்டுமே எங்களது படை வீரர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். துப்பாக்கிச் சூடு நடத்த நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in