Last Updated : 01 Mar, 2014 12:00 AM

 

Published : 01 Mar 2014 12:00 AM
Last Updated : 01 Mar 2014 12:00 AM

ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கு: ஒரு டன் வெள்ளிப்பொருள்கள் கோரிய மனு தள்ளுபடி

தமிழக‌ முதல்வர் ஜெயலலிதாவின் சட்ட ஆலோசகர் பாஸ்கரனிடம் இருக்கும் 1116 கிலோ வெள்ளி பொருட்களை பெங்களூர் நீதிமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என அரசு வழக்கறிஞர் பவானி சிங் தாக்கல் செய்த மனுவை சிறப்ப ுநீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வெள்ளிக் கிழமை தள்ளுபடி செய்தார். வழக்கின் இறுதிவாதம் மார்ச் 7-ம் தேதி தொடங்க உள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

சுதாகரன் நேரில் ஆஜர்

வழக்கில் 3-வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுதாகரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரில் ஆஜரானார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவ‌ரும் ஆஜராகவில்லை.

அந்த மனுக்களில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால் அதிக வேலைப்பளு, சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லை, இளவரசிக்கு நீரிழிவு நோய் ஆகிய காரணங்களால் ஆஜராகவில்லை என்று அவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

29 பக்க கண்டனத் தீர்ப்பு

நீதிபதி டி'குன்ஹா, வெள்ளிப்பொருள்களைக் கோரும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் வெளியிட்ட 29 பக்க தீர்ப்பாணையில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை கடுமையாக கண்டித்திருந்தார்.

''ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 13 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைகள் தொடர்ச்சி

யாக நடைபெற்று வந்தபோது ஏன் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. பவானி சிங் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிற‌து. பொறுப்பேற்ற தொடக்க காலத்திலே ஏன் 1,116 கிலோ வெள்ளிப் பொருட்களை கோரவில்லை. பல்வேறு விசாரணைகள் நடைபெற்றபோது கூட இத்தகைய மனு தாக்கல் செய்யப்படவில்லை.

கடந்த 2013-ம் ஆண்டுகள் ஆகஸ்ட் 23-ம் தேதி இவ்வழக்கின் இறுதி வாதம் நடைபெற்றபோது ஏன் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. வழக்கு முடியும் தருவாயில் கடந்த 3-ம் தேதி திடீரென இம்மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள். பாஸ்கரன் இறந்த தகவல் தெரிந்தும்,அவரிடமிருந்து வெள்ளிப்பொருட்களை பெற வேண்டும் என பவானி சிங் கோரி இருப்பது சட்டப்படி ஏற்கத் தக்கதல்ல.

இவ்வழக்கிற்கு முற்றிலும் தேவையற்ற மனுவை தாக்கல் செய்த அரசு தரப்பை கண்டிக்கிறேன்''என நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

மார்ச் 7-ம் தேதி இறுதிவாதம்

''வரும் 7-ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை தொடங்க வேண்டும். அவருடைய வாதம் முடிவடைந்த பிறகு குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் தரப்பிலும் இறுதி வாதம் செய்யலாம்'' என நீதிபதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x