

‘நான் உத்தரப் பிரதேசத்தின் தத்துப் பிள்ளை’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் ஹர்டோய், பாராபங்கி உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
பகவான் கிருஷ்ணர் உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார். எனினும் குஜராத் அவரது கர்ம பூமியானது. நான் குஜராத்தில் பிறந்தேன். என்னை உத்தரப் பிரதேசம் தத்தெடுத்துக் கொண்டது.
நீங்கள் என்னைத் தத்துப் பிள்ளையாக தேர்வு செய்திருப்ப தால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட நான் கடமைப்பட்டிருக் கிறேன். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டுகிறேன்.
இது கங்கை, யமுனை பாயும் பூமி. வளமான மண், கோடிக்கணக்கான தொழிலாளர் களைக் கொண்ட மாநிலம். ஆனாலும் இன்னமும் வறுமை மறையவில்லை. இதற்கு யார் காரணம்? நிச்சயமாக மக்கள் இல்லை. மாநிலத்தை ஆட்சி செய்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளே காரணம். இந்த 3 கட்சிகளிடம் இருந்தும் உத்தரப் பிரதேசம் விடுபட்டால்தான் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.
பாஜக ஆட்சி அமைத்தால் மக்களின் அனைத்து பிரச்சினை களுக்கும் தீர்வு காணப்படும். உத்தரப் பிரதேசத்தில் இருந்து வறுமை ஒழிக்கப்பட்டால்தான் நாடு முழுவதும் வறுமை ஒழியும்.
இவ்வாறு அவர் பேசினார்.