Published : 29 Jan 2017 12:38 PM
Last Updated : 29 Jan 2017 12:38 PM

ஆர்டிஐ சமூக ஆர்வலர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலை சேர்ந்தவர் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) சமூக ஆர்வலர் ஷெஹ்லா மசூத் (38). கடந்த 2011-ம் ஆண்டில் காந்தியவாதி அண்ணா ஹசாரே தலைமையில் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை ஷெஹ்லா மசூத் முன்னின்று நடத்தினார்.

கடந்த 2011 ஆகஸ்ட் 12-ம் தேதி போபாலில் நடைபெறவிருந்த ஊழல் எதிர்ப்பு பேரணிக்காக காரில் புறப்பட்ட அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி ஷாகிதா பர்வேஸ் என்ற பெண்ணை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசார ணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மத்திய பிரதேச பாஜக எம்.எல்ஏ. துருவ் நாராயணனும் சமூக ஆர்வலர் ஷெஹ்லாவும் நெருங்கி பழகிய தாகக் கூறப்படுகிறது. அதே எம்எல்ஏவுடன் இன்டீரியர் டிசைனராக இருந்த ஷாகிதா பர்வேஸும் நெருக்கமாக இருந்துள்ளார்.

இதில் ஏற்பட்ட பொறாமை காரணமாக ஷாகிதா பர்வேஸ் கூலிப்படையை ஏவி ஷெஹ்லாவை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

ஷெஹ்லாவை கொலை செய்த கூலிப்படையைச் சேர்ந்த சாகிப் அலி, தபீஸ், இர்பான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கூலிப்படைக்கு ஏற்பாடு செய்த ஷாகிதா பர்வேஸின் தோழி சபா பருக்கியும் கைது செய்யப்பட்டார்.

இந்தூரில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு தரப்பு சாட்சியாக மாறியதால் இர்பான் விடுதலை செய்யப்பட்டார். ஷாகிதா பர்வேஸ், சபா பருக்கி, சாகிப் அலி, தபீஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x