

பரல் குண்டுகள் எனப்படும் பெல்லட் குண்டுகளைச் சுடுவதற்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளின் உச்ச திறன் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தகவலளிக்க இந்திய ஆயுத தொழிற்சாலை மறுப்பு தெரிவித்துள்ளது.
பரல் குண்டுகளைச் சுடுவதற்குப் பயன்படுத்தப்படும் ‘12 பேர் பம்ப் ஆக்சன் கன் துப்பாக்கியை ஆயுத தொழிற்சாலை வாரியம் தயாரித்துள்ளது. அந்த துப்பாக்கிகளின் உச்ச திறன், அதன் தாக்கம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பை் வெங்கடேஷ் நாயக் என்பவர் விவரம் கோரியிருந்தார்.
மேலும் அந்த துப்பாக்கியின் ரகங்கள், 2010 ஜனவரி 1-ம் தேதி முதல் இதுவரையில் விற்பனையான எண்ணிக்கை, அந்தத் துப்பாக்கியில் பயன்படுத்த ஏதுவான குண்டுகளின் விவரங்கள், விலை, வாங்கியவர்களின் விவரம், விற்பனை செய்யப்பட்ட தேதி, விலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் அவர் கோரியிருந்தார்.
புனே, கட்கியில் உள்ள ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் பல்வேறு உயர் அதிகாரிகள் அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்தனர். எனினும் நாட்டின பாதுகாப்பு தொடர்பான விவரங்களை அளிக்கத் தேவையில்லை விதிவிலக்கைக் காரணம் காட்டி தகவல் அளிக்க மறுத்துவிட்டனர்.
நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் என்பதால் தகவல் அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெங்கடேஷ் நாயக் கூறும்போது, “வெளிநாட்டு படையெடுப்புகளின்போது தற்காத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், வெடிபொருள்களின் விவரங்களை நான் கேட்கவில்லை. கலவர எதிர்ப்பு ஆயுதத்தின் சிறப்பியல்பு, விலை, விற்பனை விவரங்கள், இதுபோன்ற ஆயுதங்கள் மனிதரகள் மீது பிரயோகிக்கப்படும்போது அதன் தாக்கம் ஆகியவற்றைத்தான் நான் கேட்டிருந்தேன்” என தெரிவித்துள்ளார்.