Published : 07 Mar 2014 08:22 PM
Last Updated : 07 Mar 2014 08:22 PM

கடற்படை கப்பல் விபத்துகள்: அந்தோணி பதவி விலக பாஜக வலியுறுத்தல்

மும்பையில் மீண்டும் கடற்படை கப்பல் விபத்து ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட கப்பல் விபத்தில், கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். துறைமுக அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்தையும், கடற்படை அதிகாரி மரணத்தையும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, கடற்படை கப்பல் விபத்துகள் தொடர்பாக விரிவான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், இந்த விபத்துகள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, "கடந்த 11 மாதங்களில் 11 விபத்துகள் நிகழ்ந்திருப்பது மிகப் பெரிய விவகாரம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முற்றிலுமாக கடற்படை மீது கவனம் செலுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதற்குப் பொறுப்பேற்று, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி உடனடியாக பதவி விலக வேண்டும்" என்றார்.

போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் காலாவதியானவை என்று குற்றம்சாட்டிய அவர், "பாதுகாப்பு அமைச்சகம் தமக்குத் தேவையான அனைத்து நிதியைப் பெறுகிறது என்பது உண்மையல்ல. பாதுகாப்பு அமைச்சகம் தம்மிடம் உள்ள நிதியை சரியான முறையில் செலவிடவில்லை என்பதே உண்மை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இயலாமையைத்தான் இது காட்டுகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x