Last Updated : 10 Oct, 2014 09:00 PM

 

Published : 10 Oct 2014 09:00 PM
Last Updated : 10 Oct 2014 09:00 PM

ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெற வாய்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பாக செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவசர மனுவாக ஏற்று விசாரணை நடத்தப்படுவதற்கான சட்ட நடைமுறைகள் பூர்த்தி செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, உச்ச நீதிமன்ற பதிவுத்துறை, ஜாமீன் மனுவை, அவசர மனுவாக ஏற்று விசாரணை நடத்தப்படுவதற்கான பட்டியலில் அக்டோபர் 13ஆம் தேதி சேர்க்கும் என்று ஜெயலலிதா சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் நேற்று ஜெயலலிதா சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

தனது முதிர்ந்த வயதைச் சுட்டிக்காட்டியும், பல்வேறு உடல் உபாதைகளையும் சுட்டிக் காட்டியும் ஜாமீன் மனு கோரப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு நீதிமன்ற தண்டனை உத்தரவை ரத்துச் செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணைக் காலத்தைக் கருத்தில் கொண்டும் ஜாமீன் அளிக்க வேண்டுமாறு அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜாமீன் கொடுக்கலாம் என்று ராம்ஜேத் மலானி வாதிட்டார். ஜாமீன் கொடுப்பதில் ஆட்சேபணை இல்லை என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் தெரிவித்தார்.

ஆனால் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா, அவசரமாக ஜாமீன் கொடுப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்றும், மேலும் உச்ச நீதிமன்றத்தைச் சுட்டிக் காட்டி ஊழல் என்பது மனித உரிமை மீறல் என்றும் கூறி ஜாமீன் மனுவை நிராகரித்தார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பாகச் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெற வாய்ப்பிருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x