Published : 17 Sep 2013 08:39 PM
Last Updated : 17 Sep 2013 08:39 PM

ஏழைகளுக்காகவே செயலாற்றுகிறது காங்கிரஸ்: ராகுல்

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடியை மறைமுகமாகத் தாக்கிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, எதிர்கட்சியினர் பணக்காரர்களுக்காக பணியாற்றுகிறது என்றும், தமது கட்சியோ ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களது கனவுகளை நனவாக்குவதற்குமே செயலாற்றுகிறது என்றும் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலையொட்டி, ராஜஸ்தானின் பரன் பகுதியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை அவர் பேசுகையில், “உங்கள் குழந்தைகள் மிகப் பெரிய கனவுகளைக் காணவே நாம் விரும்புகிறோம். கனவு காண அனுமதிக்கப்படவில்லை எனில், இந்த தேசம் முன்னேற்றம் அடையாது.

சிலர் தங்கள் சாதனைகளை மிகைப்படுத்தி பேசி வருவதுபோல் நாங்கள் பேச மாட்டோம். மாறாக செயலில்தான் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது” என்று மோடியை மறைமுகமாகத் தாக்கினார்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மேற்கோள் காட்டிய ராகுல், பணக்காரர்கள் மென்மேலும் பலன்களைப் பெறவேண்டும் என்பதற்காகவே அந்தச் சட்டத்தை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்ப்பதாகக் குற்றம்சாட்டினார்.

“அனைத்து குடிமக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, உணவு பாதுகாப்பு சட்டத்தை அரசு கொண்டுவந்திருக்கிறோம். ஏழைகளின் நலனுக்காக திட்டங்களைக் கொண்டுவரும்போது, அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்று அவர்கள் (பா.ஜ.க) கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், நிலம் கையகப்படுத்தும்போதும், சுரஙகங்களை ஒதுக்கீடு செய்யம்போதும் எவரும் கேள்வி எழுப்புவதில்லை. இதுதான் அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள வித்தியாசம்.

உங்களுடைய கனவுகளையொட்டியதே எங்களுடைய கனவுகள். ஆனால், அவர்களோ வெறும் 500 பேருக்காக மட்டுமே கனவு காண்கிறார்கள். காரிலும் விமானத்திலும் வலம்வருகிறார்கள். அதுதான் அவர்களது அரசியல்.

ராஜஸ்தானில் மருந்துகளை அரசு இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இங்கே மட்டும் அல்ல. இதை நாடு முழுவதும் கொண்டுசெல்வோம்” என்றார் ராகுல் காந்தி.

மேலும், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், பஞ்சாயத்து ராஜ் சட்டம் முதலானவை குறித்தும் அவர் விவரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x