

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட பினாமி சொத்து வழக்கில், 2 அசையா சொத்துகளை வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முடக்கினர்.
லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். அவர் பங்குகள் வைத்துள்ள நிறுவனங்களில் பினாமி சொத்துகள் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
சுமார் ரூ.1000 கோடிக்கு பினாமி சொத்து பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. மேலும் மிசா பாரதி, அவருடைய கணவர் சைலேஷ் குமாருக்கு வருமான வரித்துறை யினர் சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை.
இந்நிலையில், டெல்லியில் உள்ள வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை வருமான வரித் துறையினர் நேற்று முடக்கினர். இந்த 2 சொத்துகளும் பினாமியின் வசம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றின் மதிப்பை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
அதிகாரிகள் கூறும்போது, ‘‘மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி உள்ளது. விரைவில் மேலும் சில சொத்துகள் முடக்கப்படும்’’ என்று நேற்று தெரிவித்தனர்.