Published : 10 Jun 2015 12:41 PM
Last Updated : 10 Jun 2015 12:41 PM
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி இயல்பாக நடைபெறவிடாமல் முடக்குவதற்காகவே மத்திய அரசு தன் மீதான கைது நடவடிக்கை போன்ற சதிச் செயல்களில் ஈடுபடுவதாக டெல்லி அரசின் முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திரசிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார்.
போலி கல்விச் சான்றிதழ் பெற்றதாக கைது செய்யப்பட்ட ஜிதேந்தர்சிங் தோமரை விசாரணைக்காக உத்தரப் பிரதேசம் மாநிலம் பைசாபாத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், "என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. எனது பட்டப்படிப்புச் சான்றிதழ் உண்மையானது. டெல்லி பாஜகவும் மத்திய அரசும் இணைந்து சதி செய்கின்றன. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு இயல்பாக நடைபெறக்கூடாது என்பதே அவர்களது சதித் திட்டம்" எனக் கூறியுள்ளார்.
ஜிதேந்தர்சிங் தோமர் நேற்று கைது செய்யப்பட்டார். கைதானவுடன் தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தோமரை 4 நாள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் மீது ஐபிசி 420, 467, 468 மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT