

தெலங்கானா மாநிலத்தில் ஒரு முதியவர் மீது மோதிய கார், சடலத்துடன் வேகமாக சென்றது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் 30 கி. மீட்டர் தூரம் காரை துரத்திச் சென்று அந்த சடலத்தை மீட்டனர்.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், சவுட்டுப்பல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி (65). இவர் நேற்று மதியம் தனது வீட்டில் இருந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதி நிற்காமல் சென்றது. இதை அங்கிருந்த அனைவரும் பார்த்தனர். ஆனால், விபத்து நடந்த இடத்தில் வெங்கட் ரெட்டியின் சடலம் இல்லை. இதனால் அனைவரும் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில், விபத்துக்கு காரணமான காருக்கு அடியில் வெங்கட்ரெட்டியின் சடலம் சிக்கி இருந்ததைப் பார்த்த கிராம மக்கள், 30 கி. மீட்டர் வரை துரத்திச் சென்று அந்த காரை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கார் ஓட்டுநரை கைது செய்ததோடு, வெங்கட் ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.