Published : 13 Jul 2016 06:45 PM
Last Updated : 13 Jul 2016 06:45 PM
தலைநகர் டெல்லியில் மாட்டு இறைச்சி வைத்திருப்பது மற்றும் உண்பதை குற்றச் செயலாக கருதுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி கட்சி அரசு பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது செப்டம்பர் 14-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சட்ட மாணவர் கவுரவ் ஜெயின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், “டெல்லியில் மாட்டு இறைச்சி வைத்திருப்பது மற்றும் உண்பதை, டெல்லி வேளாண் கால்நடை பாதுகாப்பு சட்டம் குற்றச் செயல் என கூறுகிறது. இது தொடர்பான சட்டப்பிரிவை நீக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, “மகாராஷ்டிர அரசின் இதேபோன்ற ஒரு சட்டப் பிரிவை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் மத்தியப் பிரதேசத்தில் இதே விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்றார்.
எஸ்.சி., எஸ்.டி. மக்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடும் தன்னார்வ அமைப்பு ஒன்றும் இணைந்து இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளது. இம்மனுவில், “மாட்டு இறைச்சி உண்பதை குற்றச் செயலாக கருதுவது அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். ஒருவர் தான் விரும்பிய உணவை உண்பதற்கான உரிமை, அரசியல் சட்டத்தின் வாழ்வதற்கான உரிமையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினர் அடிக்கடி மாட்டு இறைச்சி உண்கின்றனர். இந்த சட்டப்பிரிவால் அவர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT