Last Updated : 01 Oct, 2014 08:31 AM

 

Published : 01 Oct 2014 08:31 AM
Last Updated : 01 Oct 2014 08:31 AM

ஜெயலலிதா சிறப்பு மனு இன்று விசாரணை: பழைய மனு 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் தண்டனையை ரத்து செய்யக்கோரியும் தாக்கல் செய்த மனு வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால் வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஜாமீன் கோரியும் தங்களுக்கு வழங்கப் பட்ட தண்டனை, தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும் 4 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ரத்னகலா முன்பு 11-வது நீதிமன்ற ஹாலில் நேற்று விசாரணைக்கு வந்தன.

காலை 9 மணிக்கு நீதிபதி ரத்னகலா தனது இருக்கையில் அமர்ந்து அவசர கால மனுக்களை விசாரிக்க ஆரம்பித்தார்.

காலை 10.30 மணிக்கு ஜெயல லிதா தரப்பு வழக்கறிஞர்கள் பி.குமார், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர் களைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு வழக்கறிஞர்கள் பவானி சிங், முருகேஷ் எஸ்.மரடி ஆகியோர் வந்தனர். ஜெயலலிதா தரப்புக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் அவரது உதவி வழக்கறிஞர்கள் 3 பேரும் 10.52 மணிக்கு வந்தனர்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நீதிபதி ரத்னகலா முன்பு காலை 11.05-க்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் ஜாமீன் மனு மீதான வாதத்தை தொடங்குவதற்கு முன்பாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் பேசினார்.

பவானி சிங் மறுப்பு

அப்போது,''ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு என்னை அரசு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் கடந்த 27-ம் தேதி தீர்ப்பு வெளியானதால் அன்றுடன் எனது பணி முடிந்துவிட்டது. என்னால் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகி வாதாட முடியாது. இது தொடர்பாக கர்நாடக அரசு அரசாணை வெளியிடவில்லை'' என்றார். இதனைத் தொடர்ந்து நீதிபதி ரத்னகலா, ''அரசு வழக்கறிஞர் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது.எனவே வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்'' என்றார்.

ஜெயலலிதா தரப்பு அதிர்ச்சி

நீதிபதியின் உத்தரவை சற்றும் எதிர்பாராத ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் அம்ஜத் பாஷா பேசிய போது, ''விசாரிக்காமலே தேதியை ஒத்திவைப்பது ஏற்கத்தக்கது அல்ல. 3 முறை தமிழகத்தின் முதல் வராக இருந்தவர் ஜெயலலிதா. 66 வயதான அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அரசு வழக்கறிஞர் இல்லாமலே இந்த வழக்கை விசாரிக்கலாம். அதனால் நீதித்துறையில் தவறு ஏற்படாது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பேசியபோது,''மிக அவசர மான வழக்கை தேவை யற்ற காரணத்தால் ஒத்திவைக்கக் கூடாது. நான் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் மிக மூத்த வழக்கறிஞர். இதுபோன்ற அவசர வழக்குகளுக்கு அரசு வழக்கறிஞர் தேவையில்லை''என்றார்.

இருப்பினும் நீதிபதி ரத்னகலா, அரசு வழக்கறிஞர் இல்லாமல் வழக்கை விசாரிக்க முடியாது என உறுதியாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

3 மணி நேரத்தில் புதிய மனு

இந்நிலையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி ரத்னகலா ஏற்காத அதே மனுவை மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர கால சிறப்பு மனுவாக தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதற்காக அவரது வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம், அன்புக்கரசு, அம்ஜத் பாஷா, மூர்த்தி ராவ் ஆகியோர் நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாயை சந்தித்துப் பேசினர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலாவிடம் ஆலோசித்துவிட்டு பதில் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வழக்கறிஞ‌ர்கள் புதிய மனுவை தட்டச்சு செய்து பிற்பகல் 1.30 மணிக்குள் அவசர கால மனுவாக தாக்கல் செய்தனர். இந்த மனுவில்,''குற்றவியல் நடைமுறை சட்டம் 389(1) பிரிவின்படி, 7 ஆண்டுகளுக்குள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் இல்லாமலே வழக்கை விசாரிக்கலாம். இதற்காக நீதிபதி தனது சுய அதிகாரத்தை பயன்படுத்தலாம். எனவே புதிய மனுக்களை அவசர கால சிறப்பு மனுவாக உடனடியாக விசாரிக்க வேண்டும்''என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாய் இந்த மனு குறித்து விடுமுறை கால நீதிபதிகள் ரத்னகலா, அப்துல் நாஸர் ஆகியோரிடம் ஆலோசித்தார். டெல்லியில் இருந்த தலைமை நீதிபதி வஹேலாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பிற்பகல் 3 மணி அளவில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுவையும் அவசர கால சிறப்பு மனுவாக ஏற்பதாக பதிவாளர் தேசாய் தெரிவித்தார்.

ராம்ஜெத்மலானி ஆஜராகிறார்

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுக்கள் க‌ர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ரத்னகலா முன்பு இன்று காலை 10.30 மணிக்கு 11-வது நீதிமன்ற ஹாலில் விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதா சார்பாக ராம்ஜெத்மலானி ஆஜராகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x