

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் (69) நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி ஆட்சியின்போது மூடப்பட்ட 700 மது பார்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரத்தில் உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னி தாலா தரப்புக்கும் சுதீரன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனிடையே கோழிக்கோட்டில் அண்மையில் நேரிட்ட விபத்தில் சுதீரன் காயமடைந்தார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து சுதீரன் நேற்று விலகினார்.