Published : 03 Dec 2013 11:59 AM
Last Updated : 03 Dec 2013 11:59 AM

காவிரி பிரச்சினை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனே அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேவேளையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்லோதா, எம்.பி.லோகூர், குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. மேலும், மனுவை முக்கிய வழக்குகளோடு சேர்த்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த மனுவில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளிக்கையில் கிவிரி ந்தி நீர் பங்கிட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

தமிழகத்தில் துவங்க இருக்கும் விவசாய பணிகளை கருத்தில் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்கும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்படாததால், புதிய மின் திட்டங்களையும், புதிய அணைகளை கட்டுவதற்கானப் பணிகளிலும் கர்நாடக அரசு ஈடுபட்டு வருவதாகவும், இதனை தடுப்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேற்பார்வை குழுவினால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும், காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் விவரித்தார்.

இதனையடுத்து, தமிழக அரசு மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்குமாறு கர்நாடக மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x