

உலக யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய ‘ஆயுஷ்’ துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தலைமையில் டெல்லியில் சமீபத்தில் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ‘ஆயுஷ்’ அமைச்சகத்தின் சார்பில், ‘தாய் சேய் நலம்’ தொடர்பாக சிறுநூல் விநியோகிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற, வீட்டு படுக்கை அறைகளில் அழகழகான படங்களை சுவர்களில் மாட்டி வைக்க வேண்டும். அவை கருவில் உள்ள குழந்தைக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆசை, கோபம், வெறுப்பு போன்றவற்றை ஒதுக்க வேண்டும். தீயவர்களுடன் பழக கூடாது. தேநீர், காபி, சர்க்கரை, வெள்ளை மாவு பொருட்கள், கரம் மசாலா, முட்டை, அசைவ உணவுகள், வறுத்த, எண்ணெய் அதிகமுள்ள உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது. ஆன்மிக சிந்தனைகளை வளர்த் துக் கொள்ள வேண்டும். வரலாற்றில் இடம்பெற்ற சிறந்த மனிதர்களைப் பற்றிய நூல்களைப் படிக்க வேண்டும். இவ்வாறு கர்ப்பிணிகளுக்கு அந்த சிறுநூலில் அறிவுரை கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இணை அமைச்சர் நாயக் கூறும்போது, ‘‘இந்த சிறுநூல் கர்ப்பிணிகளுக்கு மிகவும் உதவும் யோகா முறைகள் குறித்த விளக்கத்துடன் 3 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இதில் தாம்பத்திய உறவில் இருந்து விலகி இருக்கும்படி எந்த அறிவுரையும் இல்லை’’ என்றார்.