

'லெஹர்' புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. லெஹர் புயல் ஆந்திர கடற்கரையை இன்று பிற்பகலில் தாக்கி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னர் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை லெஹர் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மசூலிப்பட்டினம் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தப்பித்தது ஆந்திரம்: ஏற்கெனவே, பைலின், ஹெலன் என அடுத்தடுத்து 2 புயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆந்திரம் மாநிலம் மக்கள் லெஹர் புயல் குறித்து பீதியில் இருந்தனர்.
குறிப்பாக குண்டூர், கிருஷ்ணா மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லெஹர் புயலால் பாதிப்பு அதிகம் ஏற்படும் என கூறப்பட்டிருந்தது. தற்போது, புயல் வலுவிழந்துள்ளதால் பாதிப்புகள் நிச்சயம் பெரிதாக இருக்காது என்றே கூறப்படுகிறது.