Published : 09 May 2017 07:12 AM
Last Updated : 09 May 2017 07:12 AM
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் உட்பட 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் நேற்று உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷண் கவுல் உட்பட பல்வேறு நீதிபதிகள் மீது நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு அண்மையில் உத்தரவிட்டது. அதற்குப் பதிலடியாக தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்டோருக்கு மனநல பரிசோதனை நடத்த நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகூர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கர்ணன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
ஏழு நீதிபதிகளும் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் வெளிநாடு செல்வதற்கு விசா வழங்கக்கூடாது என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இது நீதித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT