Last Updated : 28 Jul, 2016 11:46 AM

 

Published : 28 Jul 2016 11:46 AM
Last Updated : 28 Jul 2016 11:46 AM

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1-க்கு பயண காப்பீடு: செப்.1 முதல் புதிய முறை அமல்

ஐஆர்சிடிசி இணையம் வாயிலாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1 ப்ரீமியம் தொகை செலுத்தி பயணக் காப்பீடு செய்துகொள்ளும் வசதியை இந்திய ரயில்வே வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல் படுத்துகிறது.

இந்த காப்பீடு திட்டம் வாயிலாக ரயில் விபத்து ஏற்படும்போது பயணி உயிரிழக்க நேர்ந்தாலோ அல்லது முற்றிலுமாக இயங்க முடியாது அளவுக்கு உடல் ஊனம் ஏற்பட்டாலோ அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், ஓரளவு இயங்கக்கூடிய அளவு மட்டும் ஊனம் இருந்தால் அந்த பயணிக்கு ரூ.7.5 இழப்பீடும், காயமடைந்த பயணியின் மருத்துவச் செலவுகளுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும். அவர்கள் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என எந்த வகுப்பில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் இந்த காப்பீடு திட்டம் பொருந்தும். ஆனால், புறநகர் ரயில் பயணிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது என ஐஆர்சிடிசி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐசிஐசிஐ லோம்பார்டு பொது காப்பீடு நிறுவனம், ராயல் சுந்தரம், ஸ்ரீராம் ஜெனரல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஐஆர்சிடிசி இந்த காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொள்கிறது.

ரயில் பயணிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்துக்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டது. 19 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை வழங்கின. இவற்றில் மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த மூன்று நிறுவனங்களும் சுழற்சி முறையில் காப்பீடு சேவையை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஓராண்டுக்கு இந்த காப்பீடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது?

இந்தத் திட்டம் வரும் செப்டம்பரில் சோதனை அடிப்படையில் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த காப்பீடு தொடர்பான சில முக்கியத் தகவல்கள் இருக்கின்றன.

ரயில்வே சட்டப் பிரிவுகள் 123, 124, 124A ஆகியனவற்றின் அடிப்படையில் ரயில் விபத்து அல்லது ஏதாவது சதி வேலையால் விபத்து ஏற்படும்போது பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி வகுப்பு பேதமில்லாமல் இழப்பீடு வழங்கப்படும்.

ஒரு பயணி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது காப்பீடு தேர்வு செய்தால் அவரது டிக்கெட் கட்டணத்துடன் ரூ.1 சேர்க்கப்படும். டிக்கெட் முன்பதிவு முடிந்த பின்னர் அதே பக்கத்தில் காப்பீடுக்கான பரிந்துரை நபர் விவரம் கேட்டு ஒரு படிவம் திரையில் தோன்றும். அதில் அளிக்கப்படும் விவரத்தின் அடிப்படையில் உரியவர்களுக்கு இழப்பீடு சென்றடையும்.

ஒரு பிஎன்ஆர் எண்ணின் கீழ் எத்தனை நபர்கள் பயணிக்கிறார்களோ அனைவருக்கும் பயணக் காப்பீடு கோரி விண்ணப்பத்தில் ஒப்புதல் தெரிவித்தால் அதற்கேற்ப ஒவ்வொரு பயணிக்கும் ரூ.1 ப்ரீமியம் தொகை மொத்தக் கட்டணத்துடன் சேரும்.

அதேபோல், ஒரு வேளை பயணி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கும் காப்பீடு செய்ய வேண்டும் என விரும்பினால் டிக்கெட் பதிவு செய்யும் போதே குழந்தையின் விவரத்தை பூர்த்தி செய்தல் வேண்டும். குழந்தைக்கான பயணக் காப்பீடு பிரிமீயம் தொகையும் டிக்கெட் கட்டணத்துடன் சேர்க்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x