Published : 13 Apr 2017 06:44 PM
Last Updated : 13 Apr 2017 06:44 PM
டெல்லியில் தமிழக விவசாயிகள் குட்டிக்கரணம் போட்டு இன்று போராட்டம் நடத்தினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரின் போராட்டம் 31 ஆவது நாளாகத் தொடர்கிறது.
இச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான போராட்டம் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வருகிறது. இதில், அன்றாடம் வித்தியாசமான போராட்டம் செய்து வரும் தமிழக விவசாயிகள் இன்று குட்டிக்கரணங்கள் போட்டனர். இது டெல்லிவாசிகளுடன் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மற்ற மாநிலவாசிகள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வங்கிக் கடன் ரத்து மற்றும் வறட்சிக்கான கூடுதல் நிவாரணம் உட்படப் பல்வேறு கோரிக்கைகளுடன் மார்ச் 14-ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழகம் மற்றும் தேசிய கட்சிகளின் தலைவர்களும் நேரில் வந்து ஆதரவளித்துள்ளனர். அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை மற்றும் பாஜக சார்பில் தரைவழிப்போக்குவரத்து துறை இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விவசாயிகளிடம் பேசி சமாதானம் செய்ய முயற்சித்தனர். இதில், எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் நேரில் ஆதரவு தந்து உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT