

பிரதமர் பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்கும் நிகழ்வு இந்தியா- பாகிஸ்தான் இடையே ஆன உறவை புதுப்பிக்க வலு சேர்க்கும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா , தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், "இந்தியாவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வருகை தர சம்மதம் தெரிவித்தது இரு நாட்டுக்கும் உள்ள விரோத போக்கை முறியடிக்கும். அவரது வருகை இரு நாடுகளின் உறவை புதுப்பிக்க ஏதுவாக அமையக்கூடும். பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்கும் இந்த விழாவிற்காக காஷ்மீர் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்” என்றார்.
இந்தியாவின் பிரதமராக பாஜகவின் நரேந்திர மோடி, மே 26ம் தேதி பதவியேற்க உள்ளார். இவரது பதவியேற்பு விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.
இந்த விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்வார் என பாகிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர், இந்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பது இதுவே முதன்முறை. பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நவாஸ் ஷெரீப் பங்கேற்பது வராலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது.