Published : 08 Dec 2013 08:56 AM
Last Updated : 08 Dec 2013 08:56 AM

4 மாநில தேர்தலில் பாஜக அபாரம்; அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. டெல்லியில் இழுபறி நிலை நீடிக்கிறது. நான்கு மாநிலங்களிலும் காங்கி ரஸ் தோல்வியைச் சந்தித்திருக் கிறது. ராஜஸ்தானில் ஆட்சியை இழந்துள்ள அந்தக் கட்சி, டெல்லி தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் சட்டமன்றங்க ளுக்கு கடந்த நவம்பர், டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மாலையில் முழுமையான முடிவுகள் வெளியாகின.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் சட்டமன்றத்தின் மொத்த பலம் 200. இதில் சுரு தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் உயிரிழந்ததால் அங்கு டிசம்பர் 13-ம் தேதிக்கு வாக்குப் பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதர 199 தொகுதிகளுக்கு டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

ஆட்சியமைக்க 101 உறுப்பினர் களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக 162 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸுக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதர கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

முதல்வர் அசோக் கெலோட் தலைமையிலான ஆளும் காங்கிரஸ், தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது.

பாஜக முதல்வர் வேட்பாளர் வசுந்தரா ராஜே பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். ஜாலர் பட்டான் தொகுதியில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்துப் போட்டி யிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி சந்திராவத்தை தோற்கடித்தார்.

முதல்வர் அசோக் கெலோட், சர்தார்புரா தொகுதியில் வெற்றி பெற்றார்.

மத்திய பிரதேசம்

230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்துக்கு கடந்த நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 165 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

காங்கிரஸுக்கு 58 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதர கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், விடிசா, புத்னி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். 3-வது முறையாக அவர் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அந்த மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந் தாலும் அவர் தேர்தலில் போட்டியிட வில்லை.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் சட்டமன்றத்தின் பலம் 90. இதில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆளும் பாஜக 49 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸுக்கு 39 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதர கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

முதல்வர் ரமண் சிங், ராஜ்நந்த்கான் தொகுதியில் வெற்றி பெற்று 3-வது முறையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்க உள்ளார்.

டெல்லியில் இழுபறி

டெல்லி சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 70. இதில் ஆட்சியமைக்க 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

அதற்கு அடுத்தபடியாக முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காங்கிரஸுக்கு 8 இடங்கள் கிடைத்துள்ளன. இதர கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், புது டெல்லி தொகுதி யில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்துப் போட்டியிட்டார். அவர் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தீட்சித்தை தோற்கடித்தார்.

டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்று அறிவித்துள்ளதால் அங்கு குழப்பம் நீடிக்கிறது.

டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் ஹர்ஷவர்தன் கிருஷ்ணா நகர் தொகுதியில் 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையில் பாஜக ஆட்சியமைக்க முயற்சி மேற்கொள்ளும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மோடி பிரச்சாரத்தால் அமோக வெற்றி

பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நான்கு மாநிலங்களிலும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது பிரச்சாரம் காரணமாகவே பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நரேந்திர மோடி 20 தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இதில் 16 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 7 தொகுதிகளில் பிரசாரம் செய்தார். அதில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

உள்கட்சி பூசல்களால் தடுமாறும் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சி பூசல்களும் அந்த கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலோட்டுக்கு எதிராக மூத்த தலைவர் சி.பி.ஜோஷி செயல்பட்டார் என்றும் சத்தீஸ்கரில் அஜித் ஜோகிக்கு எதிராக சரண்தாஸ் காய்களை நகர்த்தினார் என்றும் கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் மிகவும் காலதாமதமாக ஜோதிராதித்ய சிந்தியா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தோல்விக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா?

அடுத்த 6 மாதங்களில் நாடாளு மன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நான்கு மாத சட்டமன்றத் தேர்தல் முடிவு களும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படுவ தால் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை

மிசோரம் மாநிலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x