Last Updated : 22 Jul, 2016 05:22 PM

 

Published : 22 Jul 2016 05:22 PM
Last Updated : 22 Jul 2016 05:22 PM

ஆதர்ஷ் குடியிருப்பை மத்திய அரசு கையகப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

‘‘மும்பையில் சர்ச்சைக்குரிய 31 மாடி கட்டிடத்தை மத்திய அரசு கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டும்’’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்காக, மும்பை கொலபாவில் அடுக்குமாடி வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஆதர்ஷ் வீட்டு வசதி சொசைட்டி தொடங்கப்பட்டது. இந்த சொசைட்டி விதிகளை மீறி 31 மாடி கட்டிடத்தை கட்டியதாக புகார் எழுந்தது. அத்துடன், அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்கள், அதிகாரிகள் என பல தரப்பினருக்கும் சட்டவிரோதமாக வீடுகள் ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து 31 மாடி கட்டிடத்தை இடித்து தள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆதர்ஷ் சொசைட்டியினர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆதர்ஷ் கட்டிடத்தை இடித்து தள்ளவும், முறைகேடுகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.சலமேஸ்வர், ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆதர்ஷ் சொசைட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டிடத்தை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அப்போது நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறும்போது, ‘‘ஆதர்ஷ் கட்டிடத்தை மத்திய அரசு கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். மேலும், மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த அனைத்து தரப்பினரும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறும்போது, ‘‘ஆதர்ஷ் கட்டிடத்தை இடிக்க மாட்டோம். ஆதர்ஷ் கட்டிடத்தையும் நிலத்தையும் கையகப்படுத்தி பாதுகாப்போம்’’ என்று உறுதி அளித்தார்.

முன்னதாக ஆதர்ஷ் கட்டிடத்தை ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் கட்டிடத்தை தங்கள் வசம் கையகப்படுத்த வேண்டும். அதற்கான எல்லா ஆவணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x