Published : 07 Feb 2017 11:28 AM
Last Updated : 07 Feb 2017 11:28 AM
உத்தராகண்ட் மாநிலத்தில் திங்கள் கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. இதன் தாக்கம் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் உணரப்பட்டது.
உத்தராகண்டின் ருத்ரபிரயாக் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நில அதிர்வு தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உணரப்பட்டது.
இதனால் பதற்றமடைந்த மக்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் இரவு முழுதும் தெருக்களில், சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீடுகள் அதிர்ந்ததாக பலர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
உத்தராகண்டின் ருத்ரபிரயாக் பகுதிக்கு இரண்டு தேசிய பேரிடர் மீட்புப்படைகள் விரைந்துள்ளன.
இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''பிரதமர் அலுவலகம் உத்தராகண்ட் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. அனைவரின் பாதுகாப்பு மற்று நலம் குறித்து நான் பிரார்த்திக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
மேலும், நிலநடுக்கம், நில அதிர்வு ஏற்பட்ட மாநிலங்களிலிருந்து அறிக்கை கோரியிருக்கிறார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT