

தெலுங்கு கங்கை குடிநீர் ஒப்பந்தம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தெலுங்கு கங்கை குடிநீர் ஒப்பந்தத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து சென் னைக்கு கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடும்படி அண்மையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் ‘தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. எனவே கண்டலேறு அணையில் இருந்து நீர் திறந்துவிட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து சென் னையின் குடிநீர் தேவைக்காக நேற்று முன்தினம் கண்டலேறு அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கு கங்கை ஒப்பந்தம் தொடர் பாக பேச்சுவார்த்தை நடத்து வதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று விஜயவாடா செல்கிறார். அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவுள்ள அவர், தமிழகத்துக்கு உரிய கிருஷ்ணா நதி நீரை முறைப்படி திறந்துவிட நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தவுள்ளார்.