Published : 18 Sep 2016 09:53 AM
Last Updated : 18 Sep 2016 09:53 AM
பெங்களூருவில் நடந்த காவிரி போராட்டத்தின்போது கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்தியது தொடர்பாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக பதிவெண் கொண்ட பஸ், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். பல வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.
கடந்த 12-ம் தேதி நடந்த போராட் டத்தின்போது, பெங்களூருவில் மைசூரு சாலையில் டி சவுசா நகரில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கேபிஎன் நிறுவனத்துக்கு சொந்தமான பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 42 பஸ்களை தீயிட்டு கொளுத்தினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கர்நாடக காவல் துறை சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கேபிஎன் நிறுவன பஸ்கள் எரிக்கப்பட்டது குறித்த விரிவான அறிக்கையை காவல் துறை தலைவரிடம் மாநகர போலீஸார் சமர்ப்பித்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த மூத்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இந்த வழக்கை சிஐடி பிரிவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது” என்றார்.
இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பாக்யா (22) என்ற இளம்பெண்ணை போலீஸார் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேபிஎன் பணிமனை அமைந்துள்ள பகுதிக்கு அருகே தனது பெற்றோருடன் வசித்து வரும் இந்தப் பெண், கூலி வேலை செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வட கர்நாடகத்தின் யாத்கிர் பகுதியைச் சேர்ந்த இவரது குடும்பம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து குடியேறி உள்ளனர். பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இந்தப் பெண் வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு வீடியோ காட்சிகள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. அதை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT