ஐஎஸ் வாட்ஸ் அப் குழுவில் 200 கேரள இளைஞர்கள்: தேசிய புலனாய்வு மையம் தகவல்

ஐஎஸ் வாட்ஸ் அப் குழுவில் 200 கேரள இளைஞர்கள்: தேசிய புலனாய்வு மையம் தகவல்
Updated on
1 min read

கேரளாவில் 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஐஎஸ் வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஹரிஸ் மஸ்தான் என்ற கேரள இளைஞர் அவரது விருப்பமின்றி, உள்நோக்கத்துடன் ஐஎஸ்ஸின் வாட்ஸ் அப் குழுவில் அவர் இணைப்பட்டதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐஎஸ்ஸின் வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து தேசிய புலனாய்வு மையம் தரப்பில் "கேரளாவின் திரிகரிபூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஷித் அப்துல்லா என்ற இளைஞரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் கேரளாவைச் சேர்ந்த 211 இளைஞர்கள் இணைப்பட்டுள்ளனர். அந்த குழுவில் இணைக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் திரிகரிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராட ஐஎஸ் பயங்கரவாத குழுவில் இணைய அக்குழுவில் வலியுறுத்தியுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு மையத்தின் மூத்த அதிகாரி கூறும்போது, "இது தொடர்பாக ரச்ஷித் அப்துல்லா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

கடந்த 2015-ம் ஆண்டு காணாமல்போன கேரள இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு மையம் வெளியிட்ட குற்றப் பத்திரிகையில், காணாமல் போனவர்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in